ஞாயிறு, 21 நவம்பர், 2010

காக்கும் தெய்வம் கால பைரவர்

காக்கும் தெய்வம் கால பைரவர்

bairavar-swamy.jpg

ஆசிரியரைப் பற்றி…

ஸ்ரீவேம்புச்சித்தர் குணசேகர சுவாமிகள் காவல் துறையில் பணிபுரிபவர். பைரவ உபாசனை ஏற்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இறையருளால் நன்மைகள் கிடைக்கச் செய்து நல்வழி காட்டி வருகிறார். மேலும் இவர் காக்கும் தெய்வம் ஸ்ரீமகாபைரவர். செட்டிநாட்டு சீமையில் பைரவரின் அற்புத திருத்தலங்கள், அழகன் திருமுருகன், கொல்லூர் அம்மா மூகாம்பா போன்ற நூல்களை எழுதியுள்ளார். மேலும் தேய்பிறை அஷ்டமியில் யாக வேள்வி நடத்தி பைரவர் பேரருளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்து வருகிறார்.

காக்கும் தெய்வம் கால பைரவர்

காவலுக்கு அதிபதி: சிவபெருமான் தட்சணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்க மூர்த்தி அருவ வழிபாட்டிற்கும், பைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வரப்படுகிறார்கள்.

பஞ்ச குமாரர்கள்: சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது.

பைரவ ரூபம்: மேலே சொல்லப்பட்ட ஐவரில் ஸ்ரீமகா பைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய், நீல மேனியராய், நாய் வாகனத்துடன், சிலம்பு பூட்டிய பாதங்களுடன், இடுப்பில் பாம்புகளை அணிந்து கொண்டும், சூலம், கபாலம், பாசம் டமருகம் இவைகளைக் கையில் தாங்கியும், மேல் நோக்கிய தீ ஜுவாலை கொண்ட கேசத்தினராய், பிறைசந்திரன் அலங்கரிக்க இரு கோரைப் பற்களுடன் உக்ர ரூபத்துடன் திருக்காட்சி தருபவர்தான் பைரவப் பெருமான்.

பூஜைகள்: காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீ பரார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல் ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பைரவரின் சிறப்பு: சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர். காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர். சனியை சனிஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புக்களைக் கொண்டவர். இவரை கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், ஷேத்திரபாலகர், சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.

உலக சிருஷ்டி: செளந்தர்ய லஹரியில் 41வது சுலேகத்தில் காலாக்னிருத்திரனால் மஹாபிரளயத்தில் சாம்பலாக்கப்பட்ட உலகத்தை மீண்டும் உண்டு பண்ணுகின்ற காரணத்திற்காக சித் சக்தியான அம்பிகையே ஆனந்த பைரவியாகவும், ஈசனே ஆனந்த பைரவராகவும் தாண்டவமாடிக் கொண்டிருப்பதால் ஒன்பது விதமான ரசகங்களும் வெளிவருகின்றன என்றும், உலக சிருஷ்டியே ஆனந்த பைரவரால்தான் நடப்பதாகவும் மஹா காலஸம்ஹிதை. காலீதந்திரம், விஞ்ஞானபைரவர் முதலிய சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பெயர் காரணம்: பைரவர் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் பயத்தைப் போக்குபவர் மற்றும் பயத்தை அளிப்பவர் என்பதாகும். நல்லவர்களின் பயத்தைப் போக்குபவர். அதேபோல் தீயவர்களுக்கு பயத்தை அளிப்பவர். அப்படிப்பட்ட ஸ்ரீமஹாபைரவரை வணங்க வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

பிரம்மனின் செருக்கு அழித்தல்: ஒரு காலத்தில் ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மா தனக்கும் ஐந்து தலை, ஈசனுக்கும் ஐந்து தலை. ஆகவே தானே உயர்ந்தவன், தன்னைப் போற்ற வேண்டும், துதிக்க வேண்டும் என்று சித்த, ரிஷி, முனிவர்களை வற்புறுத்தத் தொடங்கவே அவர்கள் சிவனாரை தரிசித்து பிரம்மனின் ஆணவப் போக்கை எடுத்துக் கூற, பைரவப்பெருமானை அழைத்து, பிரம்மாவின் ஐந்தாவது
தலையைக் கிள்ளி ஆணவத்தைப் போக்கச் சொன்னார். அதேபோல் பைரவரும் செய்து பிரம்மாவின் ஐந்தாவது தலையை நீக்கி, அவரை நான்முகன் ஆக்கினார். பிரம்மாவை நான்முகன் ஆக்கிய சிவசொரூபமே ஸ்ரீபைரவர் என்று காசி காண்டம் சொல்கிறது.

அசுரர்களை அழிக்க பைரவர் தோன்றல்: அதேபோல் ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட, ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க, அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும், இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்குயோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆனால் தற்சமயம் நம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்டபைரவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். அசிதாகபைரவர்-ஸ்ரீபிராம்ஹி, குருபைரவர் - ஸ்ரீமாகேஸ்வரி, சண்டபைரவர் - ஸ்ரீகெளமாரி, குரோதன பைரவர் - வைஷ்ணகி, உன்மத்த பைரவர் - வாராஸ்ரீ, கபால பைரவர் - இந்திராணி, பீஷண பைரவர் - சாமுண்டி, சம்ஹார பைரவர் - சண்டிகாதேவி ஆகியோர் ஆவர்.

ராசிகளின் ராஜா: பிருமூத்ஜாதகம் என்ற நூலில் பன்னிரண்டு ராசிகளும், பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும் அவை மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கைகள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, துலாம்-புட்டங்கள், விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள், தனுசு-தொடை, மகரம்-முழங்கால்கள், கும்பம்-காலின் கீழ்பகுதி, மீனம்-கால்களின் அடிபாகம் என் பன்னிரண்டு ராசிகளும் நிறைந்துள்ளன. மேலும் பைரவரின் சேவகர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக்கூடிய அன்பர் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

சக்தி பீட காவலர்: தாட்சாயணி தேவி, தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர் பாகத்தை தராது அவமதித்ததால், தட்சனின் மகளான பார்வதி தேவியாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது, அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெலாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச்செய்தார் என்றும், தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும், அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

சனீஸ்வரருக்கு அருளுதல்: சூரிய பகவானின் புத்திரர்களாகிய எமதருமரும் சனியும் சகோதரர்களாவார்கள். இதிலே எமதருமர் நல்ல அழகுடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்ந்து, சனி ஊனமான காலுடன் சற்று அழகு குறைந்தும் காணப்பட்டதால் தனது சகோதரனால் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தார். இதனால் மனம் வருந்திய சனி, தனது தாயான சாயாதேவியிடம் மன வருத்தத்தை எடுத்துக்கூற, ‘நீ இன்று முதல் பைரவரை உள்ளன்போடு வழிபட்டு வா, அவர் உனக்கு நல்ல நிலையைத் தருவார். உனது மனத்துயரம் யாவும் தீர்ந்து போகும்’ என்று தாயார் கூறிய அறிவுரையை ஏற்று சனியும் பைரவப்பெருமானை வழிபாடு செய்து வரலானார். சனியின் உண்மை அன்பால், கள்ளமில்லா வழிபாட்டால் மனம் மகிழ்ந்த பைரவர் சனியின் உண்மை, அன்பை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக ஈஸ்வரப் பட்டம் அளித்து சனீஸ்வரராக நவக்கோள்களில் சக்தி மிகுந்த கோளாக உயர்த்தி பெருமைப்படுத்தினார். ஆகவே பைரவமூர்த்தியை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜன்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் பனி போல் விலகி ஓடும்.

அஷ்டமிப் பெருமை: சித்திரை மாத நவமி ராமருக்கும், ஆவனி மாத அஷ்டமி கிருஷ்ணருக்கும், மார்கழி மாத மூலம் ஆஞ்சநேயருக்கும், மாசி மாத அமாவாசை சிவனாருக்கும் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுவது போல் கார்த்திகை மாத அஷ்டமி பைரவாஷ்டமி என்று மிகச் சிறப்பாக எல்லா சிவத்திருவாலயங்களிலும் அவரது திருவவதாரத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளே. ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும் அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறக்க வாழலாம். மேலும் ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் உண்டு. மார்கழி - சங்கராஷ்டமி, தை - தேவதேவாஷ்டமி, மாசி -
மகேஸ்வராஷ்டமி, பங்குனி - திரியம்பகாஷ்டமி, சித்திரை - ஸ்நாதனாஷ்டமி, வைகாசி - சதாசிவாஷ்டமி, ஆனி - பகவதாஷ்டமி, ஆடி - நீலகண்டாஷ்டமி, ஆவணி - ஸ்தானுஅஷ்டமி, புரட்டாசி - சம்புகாஷ்டமி, ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி, கார்த்திகை - காலபைரவாஷ்டமி.

மேலும் காலபைரவாஷ்டமி எமவாதனை நீக்கும் மஹாதேவாஷ்டமி ஆகும். பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

அஷ்டசித்தி அருளுபவர்: மேலும் பைரவரை வழிபடுபவர்களை அஷ்டசித்திகளும் வந்தடையும். அணிமா - அணுபோல் ஆதல், மகிமா - மிகப்பெரிய உருவம் பெறல், கரிமா - மிகவும் கணமாதல், லகிமா - காற்றைப் போல் லேசாதல், பிராப்தி - விரும்பியதைப் பெறல், பிரகாம்யம் - நினைத்தவுடன் நினைத்ததைப் பெறுதல், ஈசித்துவம் - எல்லாவற்றுக்கும் மேலான தன்மை, வசித்துவம் - வசீகரத்தன்மை முதலியவை எளிதில் கிட்டும்.

சந்தன காப்பு அபிஷேகம்: பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புணுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக் காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் வருடக் கணக்கில் ஒரு கோடி வருடம் பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.

பிடித்த மாலைகள்: பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

பிடித்த உணவுப்பொருட்கள்: பைரவப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், பானகம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல்வேறு பழ வகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

சட்டை நாதர்: மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மர் இரண்ய கசிபுவின் சம்ஹாரத்திற்குப் பிறகு அவரது உக்கிரத் தன்மையைத் தணிக்க சரபேஸ்வரராக ஸ்ரீமஹா பைரவர் அவதாரம் எடுத்ததாக சீகாழிப் புராணம் கூறுவதுடன் அவ்வவதாரத்தினை சட்டநாதர் என்றும் அழைக்கிறது.

காலச்சக்ரதாரி: காலச்சக்கரத்தின் அதிபதியான பைரவ பெருமானுக்குள் பஞ்ச பூதங்கள், நவக்கோள்கள், ராசிகள், நட்சத்திரங்கள், பத்துத் திசைகள் என சர்வமும் அடங்கி இருப்பதால் அவரை வணங்கி வர அனைத்து நன்மைகளும் நிறையும். நல்ல கல்வி அறிவும், செல்வ வளமும் பெருகும். ஏவல், பில்லி, சூனியங்களில் இருந்தும், சர்வ பாப, தோசங்களிலிருந்தும் விடுதலையும், திருமண, மாங்கல்ய பாக்கியம், சந்தான பாக்கியம், நல் வேலை வாய்ப்பு என மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித் தருவார். உண்மை அன்பும் நல் தூய்மையும், நன்னம்பிக்கையும் இவருடைய வழிப்பாட்டில் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

பைரவ வழிபாடு: பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்தி நிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக் கல்வியும்,
மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.

பைரவ தீபம்: பைரவப்பெருமானுக்கு சிறுதுணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பைரவ காயத்ரி:

சுவாநத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய
தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத்

பைரவ மூல மந்திரம்:

ஏக சஷ்டி அட்சரம் மந்திரம் லகுசித்திப்ரதாயகம்
ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஸ்ய சித்தயே

மேற்கண்ட மந்திரங்களை ஜெபித்து வழிபாடு செய்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ இறையருளும் குருவருளும் இனிதே வழி நடத்தட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக