சனி, 22 ஜனவரி, 2011

பைரவர் வழிபாடு ஆறு

சொர்ண பைரவர்

சொர்ணாகர்ஷண பைரவர்: தபசு மலை.

இதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலயம் தான். புதுக்கோட்டையிலிருந்து விராச்சிலை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் (லெம்பலக்குடி வழி), ‘தபசு மலை’ என்ற சிறு மலை காணப்படுகின்றது. இந்த மலையில் முருகப் பெருமான் தண்டபாணியாகக் காட்சி அளிக்கின்றார்.

இந்த முருகன் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர். சப்த ரிஷிகள் தவம் செய்ததால் இந்த மலைக்குத் ‘தபசு மலை’ என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மலை அடிவாரத்தில் சப்தரிஷிகளின் சிலையும், பீடமும் காணப்படுகின்றது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்தப் பீடங்கள் கருதப்படுகின்றன.

சொர்ணாகர்ஷண பைரவர்

இங்கு தான் தனிச் சன்னதியில், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வீற்றிருக்கின்றார். உடன் தேவியானவர் வீற்றிருக்கின்றார். அமர்ந்த திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். ஒரு கையில், பொன் குடமாகிய பூரண கும்பத்தை ஏந்தியுள்ளார். மறு கையால் சக்தியைத் தழுவிய நிலையில் உள்ளார். ஒரு கையில் உடுக்கை, நாகபாசம், சூலம். மறு கை அபய ஹஸ்தம். தேவியானவர் ஒரு கையில் தாமரைப் பூவை வைத்துள்ளார். மறு கையால் இறைவனைத் தழுவிய வண்ணம் உள்ளார்.

நரசிம்மரின் சினம் குறைய, திருமகள் அவர்முன் தோன்றி, மடியில் அமர்ந்தது போல, அவதார நோக்கம் நிறைவேறியும், சினம் குறையாத ஸ்ரீபைரவரை சாந்தப்படுத்த, அன்னை அவர் தம் மடியில் அமர்ந்ததாகக் கூறுகின்றனர்.

சொர்ண பைரவர்

வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பது ஐதீகம். அதானால் தான் சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். இது போன்ற மூர்த்தம் அதிகம் காணப்படுவதில்லை. சிதம்பரத்தில் உள்ள பைரவர் சொர்ண கால பைரவர் என்றும், சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஆனால் அது பெரும்பாலும் கால பைரவரின் தோற்றத்தை ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அவரை வழிபட்டு வந்த தீஷிதர்கள் இரவில் வைக்கும் செப்புத்தகடானது, தினம் தோறும் காலையில் தங்கமாகக் காட்சி அளித்தது என்பது வரலாறு.

பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு என்கின்ற இடத்தில் ஓர் விநாயகர் ஆலயம் உள்ளது. அங்கு சொர்ணாகர்ஷண பைரவர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெருமாள் கோவிலிலும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு எனத் தனிச் சன்னதி உள்ளதாகத் தெரிகின்றது.

ஸ்ரீ பைரவ வழிபாடு – 8

உக்ர பைரவர்

தி.வயிரவன்பட்டி: மெய்ஞானபைரவர்

திருக்கோஷ்டியூரை அடுத்து இந்த ஊர் காணப்படுவதால், தி.வயிரவன்பட்டி எனச் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

தல இறைவன் மெய்ஞான சுவாமி என அழைக்கப்படுகின்றார். லிங்கத் திருமேனியாக, கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி பாகம் பிரியாள் என்னும் பெயரில் காட்சி அளிக்கின்றாள்.

பைரவர் தெற்கு நோக்கிய திசையில் காணப்படுகின்றார். உக்ர மூர்த்தி. காபாலிகர்களால் வழிபட்டதாகத் தெரிய வருகின்றது. வழிபோடுவோருக்குச் சகல பேறுகளையும் அளிப்பவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. பல்வேறு கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. மிகவும் பழமையான ஆலயம்.

ஸ்ரீ பைரவர்

கண்டரமாணிக்கம்: ஆண்டப்பிள்ளை கால பைரவர்:

கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் சுகந்தவனேசுவரர். இறைவி சாமீப வல்லி

இங்கு பைரவர் காலபைரவராக, பல்வேறு அற்புத வேலைப்பாடுகளுடன் எழுந்தருளியுள்ளார். இது நவபாஷாணச்சிலை என்றும், பைரவ சித்தர் என்பவர் உருவாக்கி வழிபட்டது என்ற தகவலும் கூறப்படுகின்றது.

பிரம்ம கபாலத்தை ஏந்தியுள்ளதால் கபால பைரவர் என்றும், கால பைரவர் என்றும், நாடி வரும் பக்தர்களின் துயர் துடைத்து உடன் போக்குவதால் ஆண்டப்பிள்ளை பைரவர் என்றும் போற்றப்படுகின்றார்.

ஆதி பைரவர்

இங்கு சனீசுவரரும் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றனவாம். ஸ்தல மரம் வன்னி. வன்னி பத்திரத்தால் அருச்சனை, சமித்துகளால் ஹோமம் முதலியன செய்வது விசேடம் எனக் கூறுகின்றனர்.

வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடல் இந்தத் தலத்தில் அரங்கேறியதாகவும் கூறப்படுகின்றது.

ஸ்ரீ பைரவ வழிபாடு – 7

பைரவர்கள்

வயிரவன்பட்டி: பைரவர்

நகரத்தார்களுக்கென்றுள்ள ஒன்பது கோயில்களுல் மிக முக்கியமானது வயிரன்பட்டியாகும்.

இங்கு இறைவன் வளரொளிநாதர் எனப்படுகின்றார். பைரவர் நின்ற திருக்கோலத்தில் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார். பொதுவாக சிவாலயங்களில் இறைவனுக்கு இடப் புறம் அன்னை வீற்றிருப்பாள். ஆனால் இங்கு அன்னை வீற்றிருக்க வேண்டிய இடத்தில் அதற்குப் பதிலாக ஸ்ரீ பைரவர் வீற்றிருக்கின்றார். அதன் பிறகு தான் அன்னை ஸ்ரீ பைரவருக்கு இடப்புறம் காட்சி தருகிறாள்.

வைரவர்

அதாவது முதலில் சிவன் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பைரவர் தெற்கு நோக்கியும், அதனைத் தொடர்ந்து அன்னையும் தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றாள். இது வேறு எங்கும் காணப்படாத, இத்திருக்கோயின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இதன் மூலம் அன்னையின் பணியையும் ஸ்ரீபைரவரே ஏற்றுச் செய்வதாக நம்பப்படுகின்றது.

மகா பைரவர்

அஷ்டமி போன்ற தினங்களில் சிறப்பு ஹோமம் முதலியன செய்யப்படுகின்றன.

ஸ்ரீபைரவர் இங்கு நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், ஞமலி வாகனத்துடன் காட்சி தருகின்றார். ஒரு கையில் சூலம், மறு கையில் உடுக்கை, நாக பாசம் முதலியன ஏந்தியவாறு காட்சி தருகின்றார். இடையில் நாகாபரணம் அணிந்துள்ளார். சத்ரு சம்காரத்திற்கும், ஏவல் முதலிய செய்வினைக் கோளாறுகளை நீக்குவதிலும் நிகரற்றவர்.

விநாயகர், முருகர் முதலியோர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றனர்.

கோயிலின் வெளிப்புறத்தே கருப்பண்ணசாமி எழுந்தருளி உள்ளார். ஆனால் அவருக்கு உருவம் கிடையாது. வெறும் வாள், ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்களே அங்கு வழிபடப்படுகின்றன. இதுவும் ஒரு சிறப்பாகக் கருதப்படுகின்றது. கோயிலின் வெளியே அழகிய திருக்குளமும், மண்டபமும் காணப்படுகின்றது. மிகவும் அமைதியான சூழலில் கோயில் உள்ளது.

இக்கோயில் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இறங்கி சுமார் 1 கி..மீ நடக்கவேண்டும்

ஸ்ரீ பைரவ வழிபாடு – 6

இதில் உள்ள ஸ்ரீ பைரவ வழிபாடு அனைத்தும் http://ramanans.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/நண்பரின் தளத்தில் இருந்து எடுத்தது அவருக்கு என் நன்றிகள் பல

ஸ்ரீ பைரவ வழிபாடு – 5

பைரவ சிற்பம்

கோட்டை பைரவர்:

‘திருமயம்’ தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்குள்ள சத்தியகிரீசுவர் ஆலயமும், சத்திய மூர்த்திப் பெருமாள் ஆலயமும் மிகவும் புகழ் பெற்றவை. இரண்டுமே பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் உடைய ஆலயம் இது. உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள் இங்கு தான் வீற்றிருக்கிறார். திருமுகத்தை ஒரு சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கிய சிற்பம். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீரங்கத்திற்கு முன்பாகவே இந்த திருத்தலம் தோன்றியதாக ஐதீகம்.

திருமயம் மலைக்கோட்டை

இங்குள்ள மலைக் கோட்டையைக் காவல் காக்கும் பைரவர் தான் கோட்டை பைரவர் என அழைக்கப்படுகின்றார். கோட்டை முனீசுவரர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆயினும் நின்ற திருக்கோலம், நாக சூல பாசங்களை ஏந்தியுள்ளது போன்றவற்றைப் பார்க்கும் பொழுது பைரவர் என்பதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் இவர், இந்த மலையையும், ஆலயத்தையும், இந்த ஊரையும் காப்பதாக ஐதீகம். கோட்டையின் வடக்கு வாசலில், வட புறத்தைப் பார்த்தவாறு காட்சி அளிக்கின்றார். அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து விரிந்து காணப்படுகின்து பாம்பாறு. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர்.

வாகனங்களில் அந்த வழியாகச் செல்வோர், பெரும்பாலும் இறங்கி, நின்று, தரிசித்த பின்னரே பயணத்தை மேற் கொள்கின்றனர். (வழித்துணையாக இவர் உடன் வந்து காப்பதாக ஐதீகம்). புதுக்கோட்டை டூ மதுரை, காரைக்குடி மார்க்கத்தில், பேருந்துகள் செல்லும் சாலையின் வழியில் தான் இந்த ஆலயம் உள்ளது. 24 மணி நேரமும் தரிசிக்கலாம்.

ஸ்ரீ பைரவ வழிபாடு – 4

வடுக பைரவர்: பிரான்மலை

ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான். வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலையே தற்போது பிரான் மலை என போற்றப்படுகின்றது.

இங்கு மங்கைபாகர் சன்னதி ஆகாய நிலையில் விளங்குகின்றது. இது மேல் பகுதியில் விளங்குகின்றது.

வடுகபைரவர், விநாயகர் மற்றும் தஷிணாமூர்த்தி சன்னதி பூமி என்ற நிலையில் காணப்படுகின்றது. அதாவது ஆகாயநிலைக்குக் கீழே, பாதாள நிலைக்கு மேலே நடுத்தரமாகக் காணப்படுகின்றது.

அதன் கீழே கொடுங்குன்ற நாதர் சன்னதி காணப்படுகின்றது. இது பாதாள நிலை எனக் கூறலாம்.

அழகு பைரவர்

இந்த நடுத்தரமான பூமி நிலையில், சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டவராக விளங்குகின்றார் இந்த வடுக பைரவர்.

வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. அதற்கேற்றால் போல் சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. நின்ற திருக்கோலம். அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மற்றொரு கதையும் உண்டு. முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப் படுத்தினானாம். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவராம்.

மகா பைரவர்

ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் உடனடியாகக் களைபவர் இந்த வடுக பைரவர். இவருக்குக் கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் உடனடியாகப் பலன் கிடைக்கும்.

அமைவிடம்:

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இது புதுக்கோட்டை – சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. மேலைச்சிவபுரி என்ற ஊருக்கு அருகில் இத்தலம் உள்ளது. சிங்கம்புணரி என்ற ஊரிலிருந்தும், பொன்னமராவதியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

மலைக்கு மேலே, சிறு ஆலயமும், இஸ்லாமியப் பெரியவரின் தர்காவும் உள்ளது. ஏறுவதற்கு மிகவும் அரியமலை. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.

ஸ்ரீபைரவர் வழிபாடு – 2

முதல் பைரவர்:

பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.

யோக பைரவர், திருப்பத்தூர்

இந்த ஆதி பைரவர் எழுந்தருளியுள்ள தலம் திருப்பத்தூர் திருத்தளி நாதர் ஆலயம் ஆகும். இத்தலம் காரைக்குடி திருப்பத்தூர் மார்க்கத்தில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு வெகு அருகே உள்ளது. இஃது பல சிறப்புகள் வாய்ந்த தலமாகும். மகாலட்சுமிக்காக இறைவன் கௌரி தாண்டவம் ஆடிய திருத்தலமாகும். இங்கு மகாலட்சுமி, நாராயணர் என இருவரும் தனித்தனியாக யோக கோலத்தில் வீற்றிருக்கின்றனர்.

இத்தலத்தின் ஒரு புறத்தில் தனிச் சன்னதியில் பைரவர் காணப்படுகின்றார்.

இவர் சிறப்புகள்:

உலகில் தோன்றிய முதல் பைரவர் இவர் தான் என இந்த ஆலயக் குறிப்பு கூறுகின்றது. அதானால் இவர் ‘ஆதி பைரவர்’ என அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர், பெரும்பாலான இடங்களில், கையில் சூலத்துடன், நாய் வாகனத்துடன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே ஐதீகம். ஆனால் இங்கு பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில், காணப்படுகின்றார். அதனால் யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாக இத் திருக்கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி போன்ற நாட்களில் இவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றது. இவற்றில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து வழிபாடு செய்து வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.

ஸ்ரீ பைரவர்

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர்.

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

அமைவிடம்:

திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை செல்லும் சாலைக்கு அருகே இவர் எழுந்தருளியுள்ள திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அருணகிரி நாதர், நாவுக்கரசர் போன்றோரால் பாடல் பெற்ற தலம். புற்று வடிவில் வான்மீகி வழிபட்ட தலம் ஆதலால் ‘திருப்புத்தூர்’ என்றழைக்கப்பட்டு, பின்னரு மருவி ‘திருப்பத்தூர்’ ஆகி விட்டது.

பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்லும் அன்பர்கள் அவசியம் இத் திருத்தலத்தைத் தரிசிக்கவும். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

ஸ்ரீபைரவர் வழிபாடு

எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதே போன்று நவக்கிரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது ஸ்ரீபைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும். மேலும் சில கோயில்களின் காவல் தெய்வமாக விளங்குவதும் ஸ்ரீபைரவர் தான்! பொதுவாக வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி என்ற வரிசையிலும் இருப்பார்கள். சில ஆலயங்களில் நவச்கிரக சன்னதிக்கு அருகிலும் பைரவர் சன்னதி இருக்கும்.

கால பைரவர்

ஆனால் சங்க காலத்திலோ, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலோ பைரவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. (நான் தேடிப் பார்த்தவரை கிடைக்கவில்லை)

அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிப் பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக ஆதிசங்கரரின் அவதாரத்திற்குப் பின்னரே இந்த பைரவ வழிபாடு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அவர் தாம் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்து ஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீ பைரவ வழிபாடாகும். பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்து கால பைரவாஷ்டகத்தையும் ஸ்ரீ சங்கரர் பாடியுள்ளார்.

கால பைரவர் – காசி

வட இந்தியாவில், காசியில் கால பைரவர் சன்னதி உள்ளது. இங்கு வந்து சென்று, வழிபட்டு கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டால் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இவரது திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. இவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என்ற ஒரு கருத்தும் உண்டு. சனைச்சரனுக்கு குரு கால பைரவர் தான். இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள், சனி தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உண்டு.

பைரவர் சிவனின் ஒரு அவதாரம் என்ற கருத்தும் உள்ளது. மகன்மை முறை உடையவர் என்ற கருத்தை கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். சிவனின் சூலத்திலிருந்து தோன்றியவர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் கந்த புராணம், காசி புராணம், கடம்பவனப் புராணம் போன்ற, பிற்காலத்தில் தோன்றிய புராண நூல்களிலே தான் பைரவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே இதிலிருந்து பொதுவாக பைரவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் தான் தமிழ் நாட்டில் வேரூன்றியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது. முதலில் வட நாட்டில் தோன்றிப் பரவி பின்னரே தமிழ்நாட்டில் இவ்வகை வழிபாடு பரவியிருக்கக் கூடும். ஆலயத்தில் இறுதி பூசை பைரவருக்கு நடந்தாலும் முதன்மையானவர் அவர் தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவர் குறித்து பல்வேறு வரலாறுகள் கூறப்படுகின்றன.

முதல் பைரவர்:

பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷமாக கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.

ஸ்ரீ பைரவ வழிபாடு – 3

சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதிகள் பைரவ வழிபாடு அதிகம். இந்த பைரவ வழிபாட்டில் அஷ்டபைரவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

வைரவர்

அஷ்ட பைரவர்கள்

1. யோக பைரவர், திருத்தளி நாதர் ஆலயம், திருப்பத்தூர்

2. . கால பைரவர், துர்வாசபுரம்

3. வடுக பைரவர், கொடுங்குன்ற நாதர் ஆலயம், பிரான்மலை

4. கோட்டை பைரவர், திருமய்யம்

5. சொர்ணாகர்ஷன பைரவர், தபசு மலை

6. வைரவர் ஸ்ரீவளரொளிநாதர் ஆலயம் வைரவன்பட்டி.

7. மெய்ஞானபைரவர், மெய்ஞான வைரவ சுவாமி ஆலயம் தி.வயிரவன்பட்டி.

8. கால பைரவர் ஆண்டப்பிள்ளை நாயனார் ஆலயம், கண்டரமாணிக்கம்

பைரவ அம்சங்களில் ஷேத்ரபாலகர், ஸ்ரீ பிஷாடணர், பூதநாதர், கபால பைரவர், ஆபதுத்தாரணர் எனப் பல பைரவ அம்சங்கள் உள்ளன.

கால பைரவர்:

பைரவரின் அவதாரம் பற்றி மற்றொரு புராணத் தகவலும் கூறப்படுகின்றது. சம்பாசுரனை வதம் செய்வதற்காக, சஷ்டித்திதி அன்று சிவபெருமானின் மூர்த்தமாக, கால பைரவர் அவதரித்து அவனை வதம் செய்ததாகக் கூறப்படுகின்றது. அதனால் தான் ‘சம்பா சஷ்டி’ என்பது பைரவருக்கான விழாவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துர்வாசபுரம் ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றது.

கால பைரவர்

விழா:

சம்பாசுரனை, இறைவன் கால பைரவராக அவதரித்து வதம் செய்ததற்காக, இவ்விழா ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதச் சஷ்டித் திதி அன்று கொண்டாடப்படுகின்றது. முருகனுக்கு எப்படி ஐப்பசி மாதச் சஷ்டித் திதி என்பது கந்த சஷ்டியாக விசேடமோ அது போன்று இங்குள்ள பைரவருக்கு கார்த்திகை மாதச் சஷ்டி விழா சம்பா சஷ்டியாக விசேடம். சுற்றுப் புற கிராமங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவின் இறுதி நாளன்று சம்பாச் சாதம்’ செய்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பின்னர் மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர். (சம்பாச் சாதம் என்பது, சாதத்துடன், நெய், மிளகு, சீரகம் போன்றவற்றைக் கலந்து செய்வதாகும். சற்றேறக்குறைய ஆலயங்களில் பிரசாதமாக வழங்கப்படும் வெண் பொங்கல் போல இருக்கும்)

துர்வாசபுரம் என்ற பெயருக்கும் ஒரு காரணம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. துர்வாச முனிவர் வழிபட்ட தலம் எனவும், அவர் தவம் செய்த இடம் என்றும், அவர் ஜீவ சமாதி உள்ளது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

அமைவிடம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் (ஊமையன் கோட்டை) என்னும் ஊருக்கருகே, பொன்னமராவதி செல்லும் வழியில் துர்வாசபுரம் அமைந்துள்ளது. கீழச்சிவல்பட்டியிலிருந்து, குருவிக்கொண்டான்பட்டி வழியாக ராங்கியம் என்னும் ஊர் செல்லும் பாதை வழியாகவும் வரலாம்.

ரமணரின் வாழ்வில்…

பகவான் ரமண மகரிஷி
பகவான் ரமண மகரிஷி

‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளியவர் பகவான் ரமணர். பாலப் பருவத்திலேயே திருவண்ணாமலையைத் தேடி வந்து தஞ்சம் புகுந்தவர். தனது இறுதிக் காலம் வரை அண்ணாமலையை விட்டு நீங்காதவர்.

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.

உடனே பழனிசாமி உணவை சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு சிறு சிறு உருண்டைகளாக்கிப் பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும் ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள்.

எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார். எதிலும் பற்றற்று இருப்பது தானே ஞானிகளின் இயல்பு.

*******************

சதா ஞான நிலையிலேயே பகவான் இருந்து வந்த போதிலும் ஆசிரம வாழ்வில் அவருடைய நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.

ஒருநாள்… விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர். ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம், ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.

அதற்கு அந்த மனிதரும், ’ஓ, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்’ என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.

அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி, ‘பாருங்கள், இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.

வந்தவர்கள், இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.

பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் ‘பகவான் வருகிறார், பகவான் வருகிறார்’ என்ற குரல் கேட்டது.

அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.

அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர். அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.

அதற்கு பகவான், ‘நான்தான் பகவான்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்.?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை உணராமல் இருக்கிறீர்களே!’ என்றார் வருத்ததுடன்.

தங்களுக்காக வாழாமல் பிறர்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!

*******************

ரமணரின் உபதேசங்கள்:

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

*******************

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

*******************