சனி, 22 ஜனவரி, 2011

ஸ்ரீ பைரவ வழிபாடு – 3

சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதிகள் பைரவ வழிபாடு அதிகம். இந்த பைரவ வழிபாட்டில் அஷ்டபைரவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

வைரவர்

அஷ்ட பைரவர்கள்

1. யோக பைரவர், திருத்தளி நாதர் ஆலயம், திருப்பத்தூர்

2. . கால பைரவர், துர்வாசபுரம்

3. வடுக பைரவர், கொடுங்குன்ற நாதர் ஆலயம், பிரான்மலை

4. கோட்டை பைரவர், திருமய்யம்

5. சொர்ணாகர்ஷன பைரவர், தபசு மலை

6. வைரவர் ஸ்ரீவளரொளிநாதர் ஆலயம் வைரவன்பட்டி.

7. மெய்ஞானபைரவர், மெய்ஞான வைரவ சுவாமி ஆலயம் தி.வயிரவன்பட்டி.

8. கால பைரவர் ஆண்டப்பிள்ளை நாயனார் ஆலயம், கண்டரமாணிக்கம்

பைரவ அம்சங்களில் ஷேத்ரபாலகர், ஸ்ரீ பிஷாடணர், பூதநாதர், கபால பைரவர், ஆபதுத்தாரணர் எனப் பல பைரவ அம்சங்கள் உள்ளன.

கால பைரவர்:

பைரவரின் அவதாரம் பற்றி மற்றொரு புராணத் தகவலும் கூறப்படுகின்றது. சம்பாசுரனை வதம் செய்வதற்காக, சஷ்டித்திதி அன்று சிவபெருமானின் மூர்த்தமாக, கால பைரவர் அவதரித்து அவனை வதம் செய்ததாகக் கூறப்படுகின்றது. அதனால் தான் ‘சம்பா சஷ்டி’ என்பது பைரவருக்கான விழாவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துர்வாசபுரம் ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றது.

கால பைரவர்

விழா:

சம்பாசுரனை, இறைவன் கால பைரவராக அவதரித்து வதம் செய்ததற்காக, இவ்விழா ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதச் சஷ்டித் திதி அன்று கொண்டாடப்படுகின்றது. முருகனுக்கு எப்படி ஐப்பசி மாதச் சஷ்டித் திதி என்பது கந்த சஷ்டியாக விசேடமோ அது போன்று இங்குள்ள பைரவருக்கு கார்த்திகை மாதச் சஷ்டி விழா சம்பா சஷ்டியாக விசேடம். சுற்றுப் புற கிராமங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவின் இறுதி நாளன்று சம்பாச் சாதம்’ செய்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பின்னர் மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர். (சம்பாச் சாதம் என்பது, சாதத்துடன், நெய், மிளகு, சீரகம் போன்றவற்றைக் கலந்து செய்வதாகும். சற்றேறக்குறைய ஆலயங்களில் பிரசாதமாக வழங்கப்படும் வெண் பொங்கல் போல இருக்கும்)

துர்வாசபுரம் என்ற பெயருக்கும் ஒரு காரணம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. துர்வாச முனிவர் வழிபட்ட தலம் எனவும், அவர் தவம் செய்த இடம் என்றும், அவர் ஜீவ சமாதி உள்ளது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

அமைவிடம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் (ஊமையன் கோட்டை) என்னும் ஊருக்கருகே, பொன்னமராவதி செல்லும் வழியில் துர்வாசபுரம் அமைந்துள்ளது. கீழச்சிவல்பட்டியிலிருந்து, குருவிக்கொண்டான்பட்டி வழியாக ராங்கியம் என்னும் ஊர் செல்லும் பாதை வழியாகவும் வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக