சனி, 22 ஜனவரி, 2011

பைரவர் வழிபாடு ஆறு

சொர்ண பைரவர்

சொர்ணாகர்ஷண பைரவர்: தபசு மலை.

இதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலயம் தான். புதுக்கோட்டையிலிருந்து விராச்சிலை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் (லெம்பலக்குடி வழி), ‘தபசு மலை’ என்ற சிறு மலை காணப்படுகின்றது. இந்த மலையில் முருகப் பெருமான் தண்டபாணியாகக் காட்சி அளிக்கின்றார்.

இந்த முருகன் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர். சப்த ரிஷிகள் தவம் செய்ததால் இந்த மலைக்குத் ‘தபசு மலை’ என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மலை அடிவாரத்தில் சப்தரிஷிகளின் சிலையும், பீடமும் காணப்படுகின்றது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்தப் பீடங்கள் கருதப்படுகின்றன.

சொர்ணாகர்ஷண பைரவர்

இங்கு தான் தனிச் சன்னதியில், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வீற்றிருக்கின்றார். உடன் தேவியானவர் வீற்றிருக்கின்றார். அமர்ந்த திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். ஒரு கையில், பொன் குடமாகிய பூரண கும்பத்தை ஏந்தியுள்ளார். மறு கையால் சக்தியைத் தழுவிய நிலையில் உள்ளார். ஒரு கையில் உடுக்கை, நாகபாசம், சூலம். மறு கை அபய ஹஸ்தம். தேவியானவர் ஒரு கையில் தாமரைப் பூவை வைத்துள்ளார். மறு கையால் இறைவனைத் தழுவிய வண்ணம் உள்ளார்.

நரசிம்மரின் சினம் குறைய, திருமகள் அவர்முன் தோன்றி, மடியில் அமர்ந்தது போல, அவதார நோக்கம் நிறைவேறியும், சினம் குறையாத ஸ்ரீபைரவரை சாந்தப்படுத்த, அன்னை அவர் தம் மடியில் அமர்ந்ததாகக் கூறுகின்றனர்.

சொர்ண பைரவர்

வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பது ஐதீகம். அதானால் தான் சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். இது போன்ற மூர்த்தம் அதிகம் காணப்படுவதில்லை. சிதம்பரத்தில் உள்ள பைரவர் சொர்ண கால பைரவர் என்றும், சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஆனால் அது பெரும்பாலும் கால பைரவரின் தோற்றத்தை ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அவரை வழிபட்டு வந்த தீஷிதர்கள் இரவில் வைக்கும் செப்புத்தகடானது, தினம் தோறும் காலையில் தங்கமாகக் காட்சி அளித்தது என்பது வரலாறு.

பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு என்கின்ற இடத்தில் ஓர் விநாயகர் ஆலயம் உள்ளது. அங்கு சொர்ணாகர்ஷண பைரவர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெருமாள் கோவிலிலும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு எனத் தனிச் சன்னதி உள்ளதாகத் தெரிகின்றது.

4 கருத்துகள்:

  1. தமிழ்நாட்டில் உள்ள எந்த பெருமாள் கோவிலில் சொர்ணாகர்ஷண பைரவருக்கு எனத் தனிச் சன்னதி உள்ளதாகத் தெரியப்படுத்வும்.

    நன்றி..

    பதிலளிநீக்கு
  2. தமிழ்நாட்டில் உள்ள எந்த பெருமாள் கோவிலில் சொர்ணாகர்ஷண பைரவருக்கு எனத் தனிச் சன்னதி உள்ளதாகத் தெரியப்படுத்வும்.

    மன்னிக்கவும் அது சொர்ணாகர்ஷண பைரவர் அல்ல வெறும் பைரவர் என்று மாற்றி படிக்கவும்

    பிழைக்கு மன்னிக்கவும்.

    திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசத்தில் அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் பைரவர் சந்நதி உள்ளது.

    இங்குள்ள பைரவர் முன்பு எரியும் தீபம் ஓன்று அசைந்து கொண்டே இருக்குகிறது. பைரவர் விடும் மூச்சு காற்றுத்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.



    திருநெல்வேலியில் இருந்து 40 k.m. தொலைவிலும் நாங்குனேரி ஏர்வாடி வள்ளியூர் வழியில் ஏர்வடியை அடுத்து 2 k.m. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது







    vasu.ravindran64@gmail.com

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல் அருகில் தாடிகொம்பு என்ற ஊரில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளார் ஸ்வர்நாகர்ஷன பைரவர்

    பதிலளிநீக்கு
  4. மன்னிக்கவும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் என்று குறிப்பிட்டு விட்டேன். அந்த கோவில் அருள்மிகு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு- திண்டுக்கல் மாவட்டம். பைரவர் பெயர் ஸ்வர்ண பைரவர்

    பதிலளிநீக்கு